முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் கண்மாய்கள் வறண்டதால் இடம் பெயர்ந்த பறவைகள்: பறவையியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் பகுதியில்கண்மாய்கள் வறண்டு போனதால் அங்கு தங்கியிருந்த பெரும்பாலான பறவையினங்கள் நீர் நிரம்பியுள்ள கண்மாய்களை தேடி இடம் பெயர்ந்து சென்று விட்ட நிகழ்வு பறவையியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலுள்ள நேசநேரி, சிவரக்கோட்டை,கள்ளிக்குடி,உரப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இனப்பெருக்கத்திற்காக தங்கியிருப்பது வழக்கம்.அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல் திருமங்கலம் பகுதி கண்மாய்களில் அதிகளவு பறவைகள் வந்து தங்கி கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வந்தன.அதிலும் குறிப்பாக திருமங்கலம் அருகேயுள் நேசநேரி மற்றும் உரப்பனூர் கண்மாய்கள் பருவகாலத்தில் புலம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் திகழ்ந்து வந்தது.இதற்கு காரணம் தண்ணீர் நிறைந்த கண்மாய்,கூடுகள்கட்ட ஏதுவாக திகழும் மரங்கள்,போதிய உணவுகள் கிடைப்பது,பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற இயற்கை அம்சங்கள் நிறைந்து இருப்பது தான்.ஒவ்வொரு ஆண்டும் நேசநேரி மற்றும் உரப்பனூர் கண்மாய்க்கு வந்திடும் வெளிநாட்டு பறவைகளை புகைப்பட மெடுத்திடவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் பறவையியல் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக முகாமிடுவார்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் மழை பெய்திருந்த நிலையில் தற்போது திருமங்கலம் பகுதியில் கோடைகாலம் போல் அனல் காற்று வீசிவருவதாலும் பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குவதாலும் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு போய்விட்டது.இதனால் தங்களது இனப்பெருக்க சமயத்தில் கண்மாய்கள் வறண்டு விட்டதாலும்,போதிய இரை கிடைக்கா ததாலும் பறவைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.இதையடுத்து உள்ளுர் பறவைகள் தவிர்த்து இனப்பெருக்கத்திற்காக புலம் பெயர்ந்து வந்திருந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் நீர்நிரம்பிய கண்மாய்கள் இருக்கும் இடங்களைத் தேடி இடம் பெயர்ந்து சென்றுவிட்டன.குறிப்பாக திருப்பரங்குன்றம்,மேலூர்,சிவகங்கை பகுதிகளிலுள்ள கண்மாய்களில் நீர் நிரம்பி காணப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.பறவைகளின் இடம் பெயர்வு காரணமாக வழக்கம் போல் பறவைகள் நிறைந்து காணப்படும் திருமங்கலம் பகுதி கண்மாய்கள் அனைத்தும் பறவைகளின்றி வறண்டு காணப்படுகிறது.இதே நிலை நீடிக்குமென்றால் திருமங்கலம் பகுதி கண்மாய்களை பறவைகள் மறந்து விடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக பறவையியல் ஆர்வலர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து