முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகி ஆதித்யநாத், மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்ய ஆணையம் . தடை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் சகரன்பூர் பகுதியில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீருட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.

இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படாததால், தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்றியது.

 இன்று காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேப்போல் முன்னாள் முதல்வர் மாயாவதியும் 16ம் தேதி  காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும் இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து