முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சிப்புளியில் பூசாரி அடித்து கொலை உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் கோவில் பூசாரி முன்விரோதம் காரணமாக அடித்துகொலை செய்யப்பட்டார். கைதான அண்ணன்-தம்பிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கீழ நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கேணிக்கரை வலசை தேவர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48). இவர் மீன்பிடி காலங்களில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவதுடன் அந்த பகுதியில் உள்ள கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இவர் உச்சிப்புளி கடை வீதிக்கு சென்று அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகே ஒரு ஆட்டோவில் ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது கீழநாகாச்சி வெள்ளமாசி வலசையை சேர்ந்த முருகேசன் மகன்கள் முனீஸ்குமார்(27), கார்த்தி(22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஆட்டோவை மறித்து அதில் இருந்த ராமச்சந்திரனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.
    தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்த ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து அண்ணன்–தம்பியை கைது செய்தனர். கொலைக்கான முழுமையான காரணம் குறித்து பிடிபட்டவர்களிடம் உச்சிபுளி போலிஸார் வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் ராமச்சந்திரனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்கண்ட 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், பலியான ராமசந்திரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி நாகாச்சி என்ற இடத்தில்  மதுரை-தனுஸ்கோடி தேசியநெடுஞ்சாலையில் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநாதபுரம்  கோட்டாட்சியர் சுமன், கூடுதல் துனை கண்கானிப்பாளர் லயோலா இக்னேசியஸ், ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் ராமநாதபுரம் தாசில்தார் முத்துலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததின்பேரில் உடன்பாடு ஏற்பட்டு உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதன்பின்னர் உடலை எடுத்துக்கொண்டதை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து