முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துக் கணிப்பு வதந்தி-காங்கிரசார் நம்ப வேண்டாம் - பிரியங்கா காந்தி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்புகள் சரியானது அல்ல. அவை மாற வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கருத்து கணிப்புகள் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தனது கருத்தை ஆடியோவில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தொண்டர்களே... எனது அருமை சகோதர, சகோதரிகளே... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் தைரியத்தை உடைப்பதற்காகவே இத்தகைய வதந்தி பரவி உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது.

மிக முக்கியமாக இந்த சமயத்தில்தான் நீங்கள் மிகமிக உஷாராக இருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வீண் போகாது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறியுள்ளார்.

ராகுல்காந்தியும் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாநில கட்சி தலைவர்களில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருத்து கணிப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை திசை திருப்புவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து