முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு ஒரு ஆபத்தென்றால் காக்கும் கரங்களாக அம்மா ஆட்சி இருக்கும் - இப்ஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உறுதி

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆபத்தென்றால் அவர்களைக் காக்கின்ற கரங்களாக அம்மா ஆட்சி இருக்கும் அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்ஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நிரூபித்திள்ளன...

அ.தி.மு.க. சார்பில் இப்ஃதார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இஸ்லாமியர்களை நேசிப்பதில் அ.தி.மு.க. ஆட்சிக்கு நிகரே இல்லை. பொய்யைக் கூட உண்மை என்ற நம்பி விடுகின்ற வேதனையான விஷயம் சில நேரங்களில் நடந்து விடுகிறது. பாலைவனத்தில் கடும்வெயிலில், தாகத்தோடு நடப்பவர்களுக்கு தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தெரியும். அங்கே போனால் தண்ணீர் கிடைக்கும், தாகம் தீரும் என்று நம்பி போவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரியும். அங்கே நீர் இல்லை, அவர்கள் கண்ணுக்குத்தெரிந்தது, வெறும் கானல் நீர் என்று. என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர், அ.தி.மு.க.தான் என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை, ஒன்பது சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.

இடைத்தேர்தல் வெற்றி...

தமிழ்நாட்டில் என்றுமே அம்மாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம் இதனை ஏற்று, அனைத்து சிறுபான்மையின மக்களும், இஸ்லாமிய சமுதாய மக்களும் அ.தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவை தந்தார்கள் என்பதைத்தான் ஒன்பது சட்டமன்ற இடைத் தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றி எடுத்துச் சொல்கிறது. இன்று விஞ்ஞான யுகம் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக், என சமூக வலைதளங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கருத்துக்களை தடையின்றி எடுத்துக்கூறி வருகின்றனர்.

அப்படி எல்லா வலைதளங்களிலுமே தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு வாசகம் உலா வந்தது. நல்லவர்களை இறைவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான். நம்மை இறைவனும் கைவிடவில்லை. இஸ்லாமியப் பெருமக்களும் கைவிட மாட்டார்கள். இன்னொரு வாசகமும், வலைதளங்களில் ட்ரண்ட் ஆனது. கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கை விட்டு விடுவான். இப்படித்தான் சிலருக்கு தேர்தலில் நிறைய கொடுத்ததுபோல ஒரு காட்சியை இறைவன் கொடுத்திருக்கிறான். அது கைவிட்டுப்போய்விடும் என்ற தவிப்பில், சிரிக்கக் கூட முடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவேறாது...

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏமாற்றுகிறவர்கள் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு. ஆனால், ஏமாறுகிறவர்கள் எப்பொழுதுமே ஏமாந்து கொண்டிருக்கமாட்டார்கள். சிறுபான்மையினமக்களுக்கு ஒரு துன்பமென்றால், தடுக்கின்ற கரங்களாக அ.தி.மு.க. என்றும் இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆபத்தென்றால் அவர்களைக் காக்கின்ற கரங்களாக அம்மா ஆட்சி இருக்கும். பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் எங்களைத் தேடு வருவதற்கு முன்பாகவே, அவர்களைத் தேடி நாங்கள் செல்வோம். பாதுகாப்பு தருவோம். ஜெயலலிதாவின் வழியில் சிறுபான்மையின மக்களின் தோழர்களாய் உங்களுடனே இருப்போம். உங்களுக்குத் தோள் கொடுப்போம். உங்களில் ஒருவராகவ வாழ்வோம். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து