முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்-மந்திரிகள் சமரசம் தோல்வி பதவியில் நீடிக்க ராகுல் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று ராகுலிடம் முதல் மந்திரிகள் வலியுறுத்தியும் அவர்களது சமரச  பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு படுதோல்வியைத் தழுவியதால் விரக்தி அடைந்த ராகுல், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 
 
டெல்லியில் கடந்த மே மாதம் 25-ந்தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்தனர்.

அதோடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்கும் அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்குவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் ராகுல் அதை ஏற்க வில்லை. அமேதியில் மோசமான தோல்வியைத் தழுவியதால், அவர் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருந்தார்.

சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்திய பிறகும் ராகுல் ராஜினாமா முடிவில் பிடிவாதமாக உள்ளார். இதற்கிடையே தோல்விக்கு பொறுப்பேற்று தன்னைப் போன்று மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் யாரும் பதவியை ராஜினாமா செய்ய வில்லையே என்ற ஆதங்கமும் ராகுலுக்கு ஏற்பட்டது. இதை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 250 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

அதன்பிறகும் ராகுல் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து ராகுலை நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், கமல்நாத், கேப்டன் அம்ரீந்தர்சிங், நாராயணசாமி ஆகிய 4 பேரும் சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, “தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது நல்லது அல்ல. எனவே ராஜினாமா முடிவை கைவிடுங்கள்” என்று ராகுலிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அதன் பிறகும் ராகுல் மனம் மாறவில்லை. “புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பிடி கொடுக்காமலே ராகுல் கூறினார். இதைத் தொடர்ந்து “நீங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாங்களும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறோம்” என்று அசோக் கெலாட்டும், கமல் நாத்தும் தெரிவித்தனர்.
ஆனால் ராகுல் அதை ஏற்கவில்லை. அதே சமயத்தில் தனது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மூன்று மூத்த தலைவர்களின் பெயர்கள் தலைவர் பதவிக்கு தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் சுசீல்குமார் ஷிண்டேயை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்ற   கருத்து உருவானதாக கூறப்படுகிறது.

இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒத்துக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. எனவே சுசீல்குமார் ஷிண்டே புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் காங்கிரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தப்பட்டார். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த அவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக்குவதன் மூலம் அடிமட்ட மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முடியும் என்று காங்கிரசில் ஒரு சாரார் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து