முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியின் போது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தி.மு.க. ஆட்சியின் போது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. 

வைகோ குற்றவாளி

அப்போது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அப்பீல் செய்ய அவகாசம்

இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்க உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான  தேர்தலில் திமுக தரப்பில் மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில்,  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு வந்திருப்பதால் அவர் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வைகோ கருத்து

தேச துரோக வழக்கில் நீதிபதி தீர்ப்பு அளித்த பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். வாழ்க்கையில் முக்கியமானநாள். குற்றவாளி என்று கூறியதும் உடனே தண்டனையை அறிவியுங்கள் என்று கூறினேன். குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என்று நான் கேட்டதாக நீதிபதி கூறியது தவறு. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்றுதான் கோர்ட்டில் வாதம் செய்தேன். பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு நான் ஏதும் கூறவிரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து