முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசி விமான நிலையத்தில் சாஸ்திரி சிலை திறப்பு - பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

வாரணாசி : வாரணாசி விமான நிலைய வளாகத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, வாரணாசியில் உள்ள பாபத்பூர் விமான நிலையத்தை அடைந்தார். அவரை முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி, வரவேற்றார். பின்னர், விமான நிலைய வளாகத்தில் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். அப்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அனில் சாஸ்திரி, லால் பகதூர் சாஸ்திரியின் இளைய மகனும், பா.ஜ.க. தலைவருமான சுனில் சாஸ்திரி, லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும் உ.பி. அமைச்சருமான சித்தார்த் நாத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும், அதற்கான பாதையை பட்ஜெட்டில் காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து