முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான சித்தார்த்தா உடல் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகனும், பிரபல கபே காபி டே ஓட்டல் அதிபருமான சித்தார்த்தா நேற்று முன்தினம் மாயமானார். நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும் ஏராளமான நிறுவனங்களும் நடத்தி வந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், கபே காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, சித்தார்த்தா தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்ற போது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த்தா கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார். இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் கார் சென்ற போது காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகி விட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப் பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாயமான சித்தார்த்தாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணம் உறுதியானது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சித்தார்த்தாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து