முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும், பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சிங்கக்குட்டிகள், புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களின் பல்வேறு கே்ள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:- 

கேள்வி:- காண்டாமிருகத்தைத் தொடர்ந்து வேறு புதிய மிருகங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுமா?

பதில்:- பீகார், பாட்னாவிலிருந்து பெண் காண்டாமிருகம் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். அது விரைவாக வரவழைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

கேள்வி:- வேலூர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றதென்பதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில் :- முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். அதே போல, தள்ளி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் வெற்றி வாய்ப்பை பெற்றிருக்கின்றார்கள். இருந்தாலும், அ.தி.மு.க. குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றோம். இதை மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி:- முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்னை இரண்டிற்கும் பா.ஜ.க. அரசிற்கு ஆதரவு தெரிவித்ததால் சிறுபான்மையினர் வாக்கு அ.தி.மு.க.விற்கு விழவில்லை என்பது பரவலாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றார்களே?

பதில்:- வாக்கு யாருக்கு அளிக்கப்படுகின்றது என்பது ரகசியம். அப்படியிருக்கும் போது சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்களா? பெரும்பான்மையின மக்கள் வாக்களித்தார்களா? என்று எப்படித் தெரியும். யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு தமிழகம்தான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, மதம், ஜாதியின் அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு நாங்கள் பார்க்கின்றோம்.

கேள்வி:- இதே நிலை தான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா?

பதில்:- உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தல் எப்போது வரும்?

பதில்:- விரைவில் தேர்தல் வரும்.

கேள்வி:- இரண்டு நாள் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

பதில்:- பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் பிரச்னை போன்ற அடிப்படை வசதிகள் முழுவதையும் மக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் மாவட்ட கலக்டர்கள் கண்காணித்து மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. காட்டுக்குப்பை என்ற இடத்தில் 34 பேர் வெள்ளத்தில் சிக்கி, பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக அவர்களை மீட்டெடுத்திருக்கின்றோம். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்ற காரணத்தினால், அங்கே பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக மீட்டு, கிட்டத்தட்ட 5500 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்கின்றார்கள். நீலகிரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். வருவாய்த் துறை அமைச்சர் .உதயகுமார் நேரடியாக அனைத்து இடங்களிலும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து, வருவாய்த் துறை மற்றும் மற்ற துறை அதிகாரிகளும் அங்கே கண்காணித்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து