முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்தையும் இழந்து தவிக்கும் வயநாடு மக்களை பார்த்தால் இதயம் நொறுங்குகிறது - ராகுல் காந்தி வேதனை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் வயநாடு மக்களை பார்க்கும் போது இதயம் நொறுங்குவது போல உள்ளது. கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளது.வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று முன்தினம் கேரளா வந்தார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து கடும் நிலச்சரிவு ஏற்பட்ட கவளப்பாறை பகுதிக்கு சென்று நிலச்சரிவின் பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும்படி கேட்டுக் கொண்டார். அதன் பிறகு மாம்பாட், எடவனப்பாரா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிவாரண முகாம்களுக்கு ராகுல் சென்றார். அங்கு தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தான் எப்போதும் துணை நிற்பதாக ஆறுதல் கூறினார்.

இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் கூறியதாவது:-

கேரள வெள்ள சேதம் பற்றி பிரதமர் மோடியிடம் ஏற்கனவே பேசி உள்ளேன். அவரும் துரிதமாக நிவாரண பணிகள் நடைபெற அனைத்து உதவிகளையும் கேரள மக்களுக்கு செய்வதாக உறுதி அளித்து உள்ளார். அதே போல கேரள முதல்வரிடமும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளேன். மழை வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் வயநாடு மக்களை பார்க்கும் போது இதயம் நொறுங்குவது போல உள்ளது. கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ராகுல் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். மாலையில் வயநாட்டில் உள்ள பனமரம், மானந்தவாடி, சுல்தான் பத்தேரி போன்ற பகுதிகளுக்கு சென்று ராகுல் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். இரவு கல்பட்டா அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் இன்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து