முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 46-வது நாளான நேற்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கர நாற்காலியில் வந்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆடி கருடசேவையையொட்டி நேற்று நண்பகல் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு 2 மணிவரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரி ஒருவர் கூறினார். அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து இன்று (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
 
முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் பெரம்பூரை சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரியிருந்தார்.  இதே போல் வி.கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மனீக்குமார் , சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்ற அரசின் வாதத்தை தொடர்ந்து அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து