முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள் முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி :- பால் கொள்முதல் விலையையும் விற்பனை விலையை உயர்த்தியிருக்கின்றீர்கள், மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...
பதில் :- சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அரசால், பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்படும். அதே வேளையில், விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்று அந்த சட்டமன்றத் தொடரிலேயே தெரிவித்தேன். நீங்கள் சட்டமன்றத்திலே அறிவித்தீர்கள்.
ஆனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல், பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து பேசுகின்றபொழுது, கால்நடை வளர்ப்பின் பராமரிப்புச் செலவு கூடுதலாக இருக்கிறது, பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஐந்தாண்டு காலம் ஆகிறது. இந்த இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்திலே கால்நடை தீவனங்களின் விலை ஏற்றம், பராமரிப்புச் செலவு உயர்ந்திருக்கின்ற காரணத்தினாலே அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கேட்டார்கள்.
விற்பனை விலையையும், கொள்முதல் விலையையும் கணக்கிட்டு அரசு, பசும் பாலுக்கு 4 ரூபாயும், எருமை பாலுக்கு 6 ரூபாயும் விலை உயர்த்திருக்கின்றது. அதேபோல விற்பனை விலையும் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது, பல பால் உற்பத்தியாளர் ஒன்றிய சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில சங்கங்கள் தான் லாபத்தில் இயங்குகிறது. பெரும்பாலான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் நஷ்டத்தில் இயங்குகிறது.
இருந்தாலும், அரசு இதையெல்லாம் சமாளித்து இன்றைக்கு சுமார் 4,லட்சத்து 60, ஆயிரம் பால் உற்பத்தியாளர் பயனடைய வேண்டும் என்பதற்காக பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. டீசல் விலை உயர்வதன் காரணமாக பாலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்கின்ற போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான் அரசு இந்த விலை நிர்ணயம் செய்திருக்கிறது.
கேள்வி :- கர்நாடகாவில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 6 ரூபாய் ஊக்கத் தொகையாக கொடுக்கிறார்கள். தமிழக அரசிற்கு அது போல் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
பதில் :- கர்நாடகத்தில் ரூ.29.72, கேரளாவில் ரூ.34.76, ஆந்திரா ரூ.28.13, தெலுங்கானா ரூ.27.30, குஜராத் ரூ.30.37, எல்லோரையும் விட நாம்தான் அதிகமாக பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று ரூ. 32 ஆக நிர்ணயித்திருக்கின்றோம்.
கேள்வி :- விற்பனை விலை ஏற்றத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு வருகிறதே?
பதில் :- ஐந்து வருடமாக விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது. சம்பளமும் எல்லோருக்கும் உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கும் கூலி உயர்ந்திருக்கிறது. அனைவருக்கும் உயர்வு இருக்கும்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்தி தானே கொடுக்க வேண்டும். வரவு ஐந்தாண்டு காலத்தில் எவ்வளவு கூடியிருக்கிறது என்று சொன்னால், அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். வரவு கூடியிருக்கும்பொழுது, பலதரப்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பது என்பது சுலபமல்ல.
சில காலகட்டத்தில் கால்நடைகளை நோய் தாக்குகின்றபொழுது, அதை தாக்குபிடித்து அந்த கால்நடைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. அப்படி கால்நடைகளை நோய் தாக்குகின்றபொழுது, பால் உற்பத்தி குறைந்து விடுகின்றது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தான் அரசு, தீவிரமாக பரிசீலித்து இந்த பால் விலையை உயர்த்தியிருக்கிறது.
கேள்வி :- கால்நடைகளுக்கான தீவனத்தை ரேஷன் கடைகளில் அளிக்க முடியுமா?
பதில் :- அது இயலாத காரியம். அது நடைமுறையில் ஒத்துவராது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து