முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ரூ.3,750 கோடி முதலீட்டில் துபாய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் வர்த்தக தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய "துபாய் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டம்" முதல்வரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூபாய் 3,750 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம், 10,800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வெளிநாடு பயணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகளை முதலீடாக ஈர்த்து 36 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவர் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் துபாய் வந்த அவருக்கு விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

துபாய் நகரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் பொருளாதாரம் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் பிஸினஸ் லீடர்ஸ் போரம் என்கிற அமைப்பும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடத்திய முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. முன்னதாக துபாயில் முக்கிய இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அமீரகத்தில் இந்திய வர்த்தக பிரமுகர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அங்கு தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக தொழில் அதிபர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விருப்பம் தெரிவித்தனர்.
இன்று சென்னை வருகிறார்

இந்த சந்திப்பின்போது முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகனாந்தம் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தனது 13 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயகம் திரும்புகிறார். இன்று சென்னை விமானநிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், அதிமுகவினர் முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பளிக்கின்றனர். கட்சி தொண்டர்களும் முதல்வரை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து