முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பித்ரு தோஷத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் மஹாளய அமாவாசை

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்று அழைப்பார்கள். அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாட்களை (இந்த வருடம் 13 செப்டம்பர் முதல் 28 செப்டம்பர்  வரை உள்ள நாட்கள்) மஹாளய பட்சம் என்று கூறுவார்கள். இந்த காலகட்டங்களில் நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களை (பித்ருக்கள்) நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் போது தண்ணீரில் கருப்பு எள்ளை கலந்து கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள் . மேலும், மஹாளய அமாவாசை அன்று குருக்களை அழைத்து தர்ப்பணம் செய்வார்கள். இப்படி இரண்டு முறை செய்வது வழக்கம். நம்முடைய பித்ருக்கள் நம்மை பார்க்க பூமிக்கு வருவதாகவும், அவர்களுக்கு செய்யும் மரியாதையாக, அவர்களின் இறந்த திதி அன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அதனால் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு, நம் பித்ருக்களை நினைவுகூர்ந்து, அவர்கள் ஆசி பெறும் மாதமாக இம்மாதத்தை கொண்டாடுகிறோம். பித்ருக்களுக்காக செய்யப்படும் உணவை ஷராத் என்று அழைப்பார்கள். ஷராத்தில், சாப்பாடு, பருப்பு, பாயாசம், மஞ்சள் பூசணிக்காய், அவரைக்காய் ஆகியவை இருக்கும். இவற்றை பொதுவாக வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் சமைத்து, வாழை இலையில் பரிமாறி தர்ப்பணம் செய்வார்கள்.

தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :    

நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அதனால் நம் உறவுகளுக்கிடையே ஒரு சுமூகமான மனநிலையை ஏற்படுத்தும். உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.  பொருளாதாரத்தில் ஸ்திர தன்மையை ஏற்படுத்தி, மனதில் அமைதியை கொண்டு வரும்.    பித்ரு தோஷத்தில் இருந்து  விடுவிக்கும் என்று நம்புகிறார்கள். மகாளயபட்சத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு திதியும், அந்நாளில் இறந்து போன முன்னோர்களை வணங்கினால் சில நன்மைகளே ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நாள்களின் ஒட்டுமொத்த பலனை மகாளய அமாவாசையில் வணங்கி பெறலாம் என்று கூறுகின்றனர்.

நீத்தார் கடன்களை செய்ய சில இடங்களை சிறப்பானதாக இந்துக்கள் கருதுகின்றனர். பிற கடற்கரை, நதிக்கரைகளில் செய்தாலும் கீழ்க்கண்டவை சிறப்பான தலங்களாகும்.     ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் - கடற்கரை, காசி, திருவரங்கம், பாபநாசம் - நதிக்கரை புரட்டாசி மாதத்தில் வரும் விசேஷங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டீர்களா? உங்கள் வீட்டிலும் இனி இந்த மாதம் முன்னோர்களை மனதில் வணங்கி சந்தோசமாக கொண்டாடுங்கள். இந்த சிறப்பான மஹாளய அமாவாசை நாளை சனிக்கிழமை வருகிறது. எனவே தாய், தந்தையரை இழந்தவர்கள் தவறாமல் நீர்நிலைகளுக்கு சென்று அல்லது ஆலயங்களுக்கு சென்று தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் பரிபூர்ண ஆசி நமக்கு கிடைக்கும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் பித்ருக்களின் மன வருத்தத்திற்கு நாம் ஆளாக நேரிடும். எனவே மறக்காமல் நாளைய தினம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களை இழந்தவர்களின் கடமை. அந்த கடமையை செய்ய தவற வேண்டாம். மேலும் இந்த நாளில் பக்தர்கள் தங்களால் இயன்றதை தானம் செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு எள் கலந்த சாதம் படைக்கலாம். தெருவில் ஒட்டிய வயிறுடன் திரியும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கிப் போடலாம். பசுக்களுக்கு அருகம்புல் மற்றும் அகத்திக்கீரை வாங்கி போட வேண்டும். ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உடைகளையோ, உணவையோ மனதார வழங்க வேண்டும். வசதியுள்ளவர்கள் குடை, செருப்பு போன்ற பொருட்களையும் தாராளமாக வழங்கலாம். இவ்வாறு செய்வது பித்ரு தோஷத்தை குறைக்கும் என்று ஜோதிடங்களிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து