முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் காந்தியடிகள் பிறந்தநாள்விழா

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் வீரரராகவராவ் தொடங்கி வைத்தார்.
    அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த  தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நகரம் அரண்மனை அருகேயுள்ள கதர் கிராமத் தொழில் விற்பனை நிலையத்தில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அதன் பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து, கதர் ரகங்களைப் பார்வையிட்டார். அதன்பின்னர் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், கிராமப்புற கைவினைஞர்களைக் கொண்டு நூற்பு மற்றும் நெசவுத் தொழிலை முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது.  பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும், மத்திய மற்றும் மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30 சதவிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட அனுமதி வழங்கியுள்ளது.  மேலும் அரசுப் பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கதர் இரகங்கள் கடன் முறையில் வாங்கிப் பயன் பெறும் வகையில் அரசால் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
 மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கதர் விற்பனை நிலையம், 1 கிராமிய நூற்பு நிலையம், 1 கதர் உபகிளை ஆகியவற்றில் கதர் விற்பனை, கதர் நூல் உற்பத்தி, கதர் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.  இவ்வலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கதர் அங்காடிகளுக்கு 2018-ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரூ.40 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூபாய் 26.76 லட்சம் மதிப்பில் கதர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  தற்போது 2019-ஆம்ஆண்டிற்கு ரூ.35 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கதர், பட்டு, பாலிஸ்டர், உல்லன் இரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றை வாங்கி பயன்பெற்றிட வேண்டும. இவ்வாறு பேசினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திலுள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், வட்டாட்சியர் தமிழ்செல்வி, கதர் விற்பனை மேலாளர்கள் கா.சரவண பாண்டியன், மு.ராமரத்தினம், ஆர்.முத்துக்குமார், பி.சுப்பிரமணியன்  உட்பட  அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து