முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பாரம்பரிய முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார் ஜிஜின்பிங்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை வந்த சீன அதிபருக்கு விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை, தப்பாட்டம், செண்டை மேளம், பரத நாட்டிய கலைஞர்கள் வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் அங்கு பிரதமர் மோடியுடன் கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
சீன அதிபர் வருகை

அமைதி நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங், சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து நேற்று பிற்பகல் 2-15 மணியளவில் சென்னை வந்தார். பிரத்யேகமாக ஒரு விமானமும் அடுத்து ஒரு விமானமும் வந்தது, பிரத்யேக விமானத்தில் சீன அதிபர் ஜின்பிங் வந்தார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவில் குருக்களின் பூர்ண கும்ப மரியாதையுடன் சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

விமானநிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு தமிழ்ப்பண்பாட்டின்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், செண்டை மேளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது,. நாட்டுப்புற கலைஞர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பின்னர் அவர் குண்டு துளைக்காத கார் மூலம் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டார். அவருக்கு வழியெங்கும் இந்திய சீன கொடிகளை ஏந்தி மாணவர்கள் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பளித்தனர், மாணவர்களை பார்த்து அவர் மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

சீன அதிபர் ஜின்பிங் வருகையைத்தொடர்ந்து பழைய விமான நிலையத்தில் ஐந்தாம் நுழைவாயிலில் வாழைப்பழம் மற்றும் காய்கனிகளுடன் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. சீன அதிபருக்கு விமான நிலையத்தில் இருந்து 34 இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாலை 4 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டி சோழா கிராண்ட் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக தவில் கலைஞர்கள், தப்பாட்டம், நடனத்துடன் மாணவர்கள் பொதுமக்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஆங்காங்கே சீன அதிபரை வரவேற்கும் வகையில் வாழைமரத் தோரணங்களும், கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

விழாக்கோலத்தில் மாமல்லபுரம்

சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டிருந்தது, மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன. இதற்கிடையே மாமல்லபுரத்தில் சீன அதிபரை அர்ச்சுனன் தபசு அருகே பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் அருகருகே நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். தமி்ழ்பாரம்பரியத்துடன் பிரதமர் மோடி வெள்ளை வேட்டி துண்டுடன் காணப்பட்டார்.  இருதலைவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே வந்தனர். இருவரும் நடந்தே அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் கடற்கரை கோயில் , பீமர் ரதம், ஆகிய இடங்களில் சிற்பங்களை கண்டு ரசித்தனர், மாமல்லபுரத்தின் சிற்பங்கள் சிறப்பு குறித்து பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விரிவாக விளக்கினார். ஐந்து ரதம் அருகே இருதலைவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து அளவளாவினர். அங்கு அவர்களுக்கு மாமல்லபுரத்தின் இளநீர் பரிமாறப்பட்டது தலைவர்கள் அதனை சுவைத்தனர். மாமல்லபுரத்தில் பல்வேறு சிற்பங்களை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றி பார்த்தனர். வெண்ணெய் உருண்டை பாறையை பார்த்து சீன அதிபர் ஜிஜின்பிங் வியந்து போனார். அதே போல் அங்குள்ள சிற்பங்களையும் பார்த்து சீன அதிபர் மலைத்துப் போனார். பிறகு கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் ரசித்து பார்த்தனர்.

முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தார், அவரை விமானநிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய செயலாளர் எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சீன அதிபரின் வருகையால் மாமல்லபுரம் நகரமே களைகட்டி காணப்பட்டது. இன்று கோவளத்தில் இரு தலைவர்களும் பேச்சு நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து