முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த முறையில் பண்ணைக்குட்டை அமைப்பு கலெக்டர் வீரராகவராவ் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், தவளைகுளம் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பயனாளி மூலம் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையை, மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வினைத் தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு, விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண்மைத் துறையின் மூலம் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மழை நீரை வீணாகாமல் சேமித்து வறட்சியான காலத்தில் பாசனத்திற்காக பயன்படுத்த ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது சொந்த இடத்தில் அதிகபட்சம் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் என்ற அளவிற்கு பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017ஆம் நிதியாண்டில் 520 பண்ணைக்குட்டைகளும், 2018 ஆம் நிதியாண்டில் 476 பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடமிருந்து இதுவரை மொத்தம் 1,823 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் மொத்தம் 906 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 180 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
அந்த வகையில் மாவட்ட கலெக்டர் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், தவளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூநாட்சி என்பவர் தனது சொந்த இடத்தில் ரூ.1 லட்சம் அரசு மானிய உதவியுடன் அமைத்துள்ள பண்ணைக்குட்டையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு இத்திட்டத்தின் பயன் குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிடம் கேட்டறிந்தார். அதற்கு விவசாயி பூ நாட்சி தனக்கு சொந்தமாக எட்டு ஏக்கர் அளவில் விவசாய நிலம் இருப்பதாகவும் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் தனக்கு வழங்கியுள்ள ரூ.1 லட்சம் அரசு மானியம் தனக்கு பேருதவியாக இருந்ததாகவும் இதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள பண்ணையின் மூலம் சுமார் 15 லட்சம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேமிக்க வசதியாக இருப்பதாகவும், இத்தண்ணீரைக் கொண்டு தனது சொந்த நிலத்திற்கு பாசன வசதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பண்ணைக்குட்டையினை சிறப்பாக அமைத்துள்ள பூநாட்சியை பாராட்டியதோடு பண்ணைக்குட்டையின் கரையில் பனைமரம், வேம்பு, அரசமரம் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்திடவும் அறிவுரை வழங்கினார்.  மேலும், விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இவ்விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் இரா.பாலாஜி, உதவி செயற்பொறியாளர் திருச்சி செல்வகுமார், பரமக்குடி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து