அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு

அயோத்தி : அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அயோத்தி நிலவழக்கில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அயோத்தி நகருக்குள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விவாதித்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு ஜமாயத் உலேமா ஹிந்த் ஆதரவு தெரிவித்தது. எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, உ.பி. ஷியா வக்போர்டு உள்ளிட்ட அமைப்புகள் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன. அதுபோலவே முதன்முதலில் வழக்கு பதிவு செய்த மனுதாரரின் வாரிசான இக்பால் அன்சாரி உள்ளிட்டாரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என அறிவித்து விட்டனர். அதேசமயம் மனுதாரர்களில் முகமது உமர், மிஸ்பகுதீன், மவுலானா மஹபூப் ரஹ்மான் உள்ளிட்டோரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் மேலும் 4 பேர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 4 பேரும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவை ஏற்று தாங்களும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.