முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி, கமல் சொல்வது போல் எந்த அதிசயமும் நடக்காது - அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சொல்வது போல் தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்காது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ரஜினி, கமல், விஜய் யாராக இருந்தாலும் அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை  இருக்கும். அதில் தவறில்லை. அவர்கள் தங்கள் கொள்கைகளை சொல்லலாம். மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது. எங்கள் மீது கல்லெடுத்து வீசினால் அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். எங்களுக்கு காயம் ஏற்படாது. அதற்கான தகுந்த பதிலடியை வாங்கிக் கொள்கின்றனர். அவர்கள் அமைதியாக இருந்தால் நாங்களும் அமைதியாக இருப்போம். எங்கள் கட்சி, ஆட்சி மீது வீண் விமர்சனங்களை வைக்கும் போது, நாங்கள் அம்மாதிரியான விமர்சனங்களை வைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பந்து அவர்களின் கையில்தான் உள்ளது. எங்கள் மீது பந்தை வீசினால், மீண்டும் நாங்கள் அவர்கள் மீது வீசுவோம். கட்சி, ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. பல கட்சிகளிலிருந்து இடைஞ்சல்கள் கொடுத்தாலும் அதனைத் தாண்டி வந்துள்ளோம். ஏளனங்கள், கேலிகள், கண்டனங்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஜெயலலிதா இல்லாமல் இந்த ஆட்சி நீடிக்குமா என்றனர். ஆனால், ஆட்சி நீடித்து அதிசயம் நடந்தது. மறுபடியும், 2021-ல் அ.தி.மு.க. ஆட்சி வருமா என்றால் அந்த அதிசயமும் நடக்கும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி அதிசயம் நடக்கும். அவர்கள் சொல்வது போன்று வேறு எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது. அதிசயம், அதிர்ஷ்டத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உழைப்பு தான் எங்களின் தாரகம் மந்திரம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள் என ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தெரிவித்தது குறித்த கேள்விக்கு இலங்கை தமிழர்களை அ.தி.மு.க. உளப்பூர்வமாக நேசிக்கிறது. மற்றவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக, நம்மை அழித்தவர்களோடு கைகோர்த்தார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். தி.மு.க. அப்போது நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். 2 லட்சம் பேர் வீணாக இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். அன்றைக்கு யாரெல்லாம் மகிந்த ராஜபக்சேவிடம் பரிசு வாங்கினர்? தி.மு.க. இதில் இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து