கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ரஜினிக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது

கோவா : கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதனை நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய பங்களிப்பு செய்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 26 இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன. தமிழ் படங்கள் சார்பில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியில் இருந்து கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி:சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவில், சிறப்பு தபால் தலை வெளியிடபட்டது. பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.
இதையடுத்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி. ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி என்று பேசினார்.