முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 5 ஆயிரம் கோடிமுதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - முதல்வர் எடப்பாடிமுன்னிலையில் கையெழுத்தானது

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டது. இந்த ஒப்பந்தங்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 அமெரிக்க நிறுவனங்களுடன் ஏற்கனவே கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். 28 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இணையதளம் வெளியீடு

அதை தொடர்ந்து திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். டி.ஆர்.ஓ. மற்றும் ஐ.ஐ.டி. சென்னை நிறுவனங்களுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நிகழ்வில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிட்டதோடு தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடாகும். மறைந்த முதல்வர் அம்மாவுக்கு தமிழகத்தை உற்பத்தியில் உலகத் திறன் வாய்ந்ததாக அமைக்கும் வகையில் ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது. அந்த பார்வைக்கு ஏற்ப, முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ல் நடைபெற்றது, இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

2-வது முதலீட்டாளர்கள் மாநாடு

அம்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, எனது அரசு இந்த ஆண்டு ஜனவரியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாட்டை நடத்தியது. இதில் ரூ .3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அனைத்து புரிந்துணர்வு திட்டங்களுக்கும் எனது அரசாங்கம் திடமான ஆதரவை உறுதி செய்துள்ளது. இதன் விளைவாக, இன்றுவரை, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் 219 திட்டங்கள் செயல்படுத்த பல்வேறு கட்டங்களில் உள்ளன.

புதிய வேலைவாய்ப்புகள்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு  2019 வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், கடந்த 10 மாதங்களில் மட்டும் 63 புதிய புரிந்துணர்வு திட்டங்களை அரசு ஈர்த்துள்ளது. இதன் மூலம் 83,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் முதலீடுகள் அடங்கும்.
மிகவும் திறமையான மனிதவளம் மற்றும் அமைதியான சட்டம் ஒழுங்கு தமிழகத்தை முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக மாற்றியுள்ளது. தமிழகத்தை ஒரு விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்ற டி.ஆர்.டி.ஓ மற்றும் ஐ.ஐ.டி, மெட்ராசுடனான அறிவார்ந்த ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.  இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், டாக்டர் நிலோபர் கபில், கே. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கே சண்முகம்,  டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து