முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டு குவிகிறது

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேரும் நேற்று போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது27). கால்நடை டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27-ம் தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சுங்கச்சாவடியில் அவரது மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சரானது. அப்போது லாரி தொழிலாளர்கள் 4 பேர் அவருக்கு உதவி செய்வதாக கூறி திட்டமிட்டு பெண் டாக்டரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். பின்னர் அவரது வாயில் மதுவை ஊற்றி மயக்கம் அடையச் செய்து பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றனர். அவரது உடலை அருகே உள்ள பாலத்துக்கு கீழே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் குற்றவாளிகள் 4 பேரும் பெண் டாக்டரை கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து லாரி தொழிலாளர்கள் சென்ன கேசலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். 

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் என்றும், பெண் உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினார்கள். இது போன்ற குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினார்கள். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தங்கள் மகன்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கைது செய்யப்பட்ட 2 பேரின் தாயாரும் கூறி இருந்தனர். இதைத் தொடர்ந்து அம்மாநில அரசும் கடும் நடவடிக்கையில் இறங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார். இந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு 4 பேரையும் விசாரணைக்காக ஐதராபாத் போலீசார் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர். கொலை நடந்த பாலத்தின் அருகே சென்ற போது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார்  முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் வாரங்கல்லில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய 2 பேரை என்கவுண்டர் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் டாக்டரின் தந்தை கூறும் போது, 4 குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதால் எனது மகளின் ஆன்மா சாந்தி அடையும். என்கவுண்டர் செய்த போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகள் கொல்லப்பட்ட 10 தினங்களில் நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து போலீசாருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து