முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் பிடிபட்டனர் - தேசிய புலனாய்வு அமைப்புக்கு விரைவில் விசாரணை மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது

குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல மேலும் 2 கடைகளிலும் சிம்கார்டுகளை பயங்கரவாதிகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை சப்ளை செய்தது தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் 7 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் இருந்து பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை போலி முகவரியை கொடுத்து வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருந்து சப்-இன்ஸ் பெக்டரை கொலை செய்த நிலையில் அவரது கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்ததாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பிடிபட்டனர். இதன் பின்னர் பெங்களூரில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரையில் 10 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த நிலையில்  பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன்செரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி சப்-இன்ஸ் பெக்டர் வில்சனை கொலை செய்து விட்டு பயங்கரவாதிகள் இருவரும் கேரளா வழியாக பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர். பெங்களூர் சென்றதும் அங்கு சிவாஜி நகரில் வசித்து வரும் உசேன்செரீப் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதே போல பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மற்றவர்களும் இவரது வீட்டிலேயே பதுங்கி இருந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாட்சா, முகமது மன்சூர்கான் இருவருடன் உசேன்செரீப்பும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மூன்று பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பயங்கரவாதிகளும் இன்று போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. இதன் பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்பு பற்றியும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து