முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு தன்னிச்சையாக புதிய கல்விக் கொள்கையை வெளியிடக் கூடாது: ராமதாஸ்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பதுதான் அதுவாகும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது ஆகும். இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் தாக்கல் செய்தது. அன்றே அந்த அறிக்கை பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.வரைவுக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வரைவுக்கொள்கை பற்றி கருத்து மற்றும் யோசனைகளை தெரிவிக்க ஜூன் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படிருந்த நிலையில், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று முதலில் ஜூலை 31-ம் தேதி வரையும், பின் ஆகஸ்ட் 15-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன. அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலனை செய்ததா? அவற்றின் அடிப்படையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டனவா? என்பது தெரியவில்லை. தொடக்கக் கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி அளவில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற ஒரு சில நல்ல திட்டங்கள் வரைவு தேசியக் கொள்கையில் இடம் பெற்றுள்ள போதிலும், மீதமுள்ள பெரும்பான்மையான திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள எதிர்மறையான அம்சங்களை நீக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அதை உறுதி செய்ய வேண்டியது மாணவர் நலனில் அக்கறையுள்ள கட்சிகளின் பணியாகும். .வரைவுக் கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகள் போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து