முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை கங்கைகொண்டானில் ரூ. 78 கோடியில் மெகா உணவு பூங்கா

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.78 கோடியில் உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, 

தமிழ்நாட்டிலுள்ள மக்கள்தொகையில் 50 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு விவசாயமே முதன்மையான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயியை மையமாக கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதே கிராமப்புற மக்களின் இல்லாமையை போக்குவதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான வழியாகும். வேளாண்மைத் துறையில் முதலீடு செய்வதென்பது உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் இன்றியமையாததாகும். காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்தது,

தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தையே குறிக்கிறது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது 2020 - 21ம் ஆண்டில் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்து நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020 - 21ம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.  கரும்பு விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20ம் ஆண்டில் 68.35 கோடி ரூபாய் சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இத்திட்டமானது 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவியுடன் 2020 - 21ம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநில அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிந்துரை விலைக்கும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கும் இடையேயான வேறுபாட்டினை சரி செய்ய, கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்திக்கான உற்பத்தி ஊக்கத்தொகை, 2019-20ம் ஆண்டின் அரவைப்பருவத்திலும் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த நோக்கத்திற்காக 2020-21ம் ஆண்டின் வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டின் அரவைக்காலத்திற்கு டன் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை என்ற அளவில் 110 கோடி ரூபாயை போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும். இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தித் தொழில் புத்துயிர் பெற உதவும்.சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, தற்போது 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2020 - 21ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுப்பண்ணைய முறையின் தொடர் முயற்சியாக, சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் ஆறு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கெனவே 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்பொழுது, 45 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019-20ம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்தவாறு, அரசு, ‘தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை’யினை வெளியிட்டுள்ளது. 2020 - 21ம் ஆண்டில் வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100.56 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 2016-17ம் ஆண்டிலிருந்து 2019-20ம் ஆண்டு வரையில், 25 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள், நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்கத்தை, நிலத் தொகுப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதன் மூலம், ஒவ்வொன்றும் 250 ஏக்கர் கொண்ட 10,000 நிலத் தொகுப்புகள், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ‘தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின்’ கீழ் மேம்படுத்தப்படும்.

2020 - 21ம் ஆண்டில், 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 3,000 நிலத் தொகுப்புகள் பயனடையும்.புவி வெப்பமயமாதல் காரணமாக, சமீபகாலங்களில் அடிக்கடி பூச்சித் தாக்குதல்கள் ஏற்பட்டு வருகிறது. 2019-20ம் ஆண்டில், 47.66 கோடி ரூபாய் செலவில் அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சிகளால் தமிழ்நாட்டில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டது. அமெரிக்க படைப்புழுத் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக 5 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, 2020 - 21ம் ஆண்டில் 20 கோடி ரூபாயில் பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடப்பு ரபி பருவத்தில், நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ மற்றும் புகையான் பூச்சித் தாக்குதலும், தென்னையில் ‘ரூகோஸ் சுழல் வெள்ளை ஈ’ தாக்குதலும் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவற்றின் பரவுதலைக் தடுக்கவும், தேவை ஏற்படின், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண் துறையில் விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்த, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர். ஏற்கெனவே உள்ள அலுவலர்களை தக்க முறையில் பயன்படுத்தி, வேளாண் நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள், துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெறுவதற்கு, ‘உழவர்–அலுவலர் தொடர்புத் திட்டத்தை’ அரசு அறிமுகம் செய்யும். வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்குவதுடன், தகவல் தொழில்நுட்ப உத்திகளும் இதன் பொருட்டு பயன்படுத்தப்படும். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு, மகத்தான வெற்றி கண்டு வருகிறது.

இது வரையில், இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக, 724.14 கோடி ரூபாய் என்ற உயர்த்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன், 2020 - 21ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த 2018-19ம் ஆண்டில், தமிழ்நாட்டில் 700.69 கோடி ரூபாய் செலவில் 3.51 லட்சம் ஏக்கர் நிலம் நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2019-20ம் ஆண்டில் 5.63 லட்சம் ஏக்கர் நிலங்கள் 1,370.24 கோடி ரூபாய் செலவில் நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. வரும் 2020 -21ம் ஆண்டில் 1,844.97 கோடி ரூபாய் செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும். பயன்தரும் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்குவிப்பது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், மாறிவரும் ஊட்டச்சத்துத் தேவைகளை எதிர் கொள்ளவும் வகை செய்கிறது.

இந்த அரசு, இதற்கான சிறப்பு மையங்களை அமைக்க 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் ஆகியவற்றிற்கான மையங்கள் அமைக்க உள்ளது. தோட்டக்கலைப் பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, 2020 - 21ம் ஆண்டில், 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்வதற்கும், பண்ணை செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கும் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது மாநிலத்தில், 1,665 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களும், 997 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களும், 15 கரும்பிற்கான வேளாண் இயந்திர வாடகை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2020 - 21ம் ஆண்டில், மொத்த நிதி ஒதுக்கீடான, 200 கோடி ரூபாய் மதிப்பில் 100 வட்டார அளவிலான மற்றும் 250 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

பிரதம மந்திரியின் கிஸான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகா அபியான் திட்டம், 10 குதிரைத் திறன் வரை கொண்ட 17,500 தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70 சதவீதம் மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு 472.85 கோடி ரூபாய் ஆகும். இதில், தமிழ்நாடு அரசின் பங்கு தொகைக்காக, 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தில் 208.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020 - 21ம் நிதியாண்டில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், 218 கோடி ரூபாய் செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் 70 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 இடங்களில் முன்னோடித் திட்ட அடிப்படையில் மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு வேளாண் சந்தை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நிறுவப்படும். இந்த வளாகங்கள் இடுபொருள் விற்பனையகங்கள், சேவை மையங்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் போன்ற வசதிகளுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினரும் பயன்பெறும் வகையில், பொதுவான தளங்களாகச் செயல்படும். 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து