முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து: கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி பயங்கர மோதல்: 19 பேர் பலி

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருப்பூர் : திருப்பூர் அருகே கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி மோதிய கோரவிபத்தில் 19 பேர் பலியாகினர்.  20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதிகாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை நான்கு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவ இடத்திற்குச் நேரில் வந்து பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது:

கேரள அரசு சொகுசு பேருந்தில் 48 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். விபத்தில் இறந்த, காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பேருந்து கேரளா அரசின் சொகுசு பேருந்து என்பதால் பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளாவில் இருந்து ஒரு குழு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறையும், வருவாய் துறை அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்பட்டு கேரளா அரசுக்கு தெரிவித்து அரசு நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்து லாரி டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து தகவலுக்கு 97466 40662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணையும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவினாசி கோர விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன், வேளாண் அமைச்சர் சுனில்குமார், ஆலத்தூர் எம்.பி.ஹரிதாஸ், பாலக்காடு எம்.பி.சாபிபரம்பில் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் இறந்த, காயம் அடைந்தவர்கள் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் கேரள முதல்வர் உத்தரவின் பேரில் விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும், மரணமடைந்தவர்களின் உடல்களை கேரளாவுக்கு கொண்டு வர 20 ஆம்புலன்ஸ்கள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து பலர் திருப்பூர் வந்திருந்தனர் அவர்களிடம் பிரேத பரிசோதனை முடித்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் சிலர் கேரள மருத்துவ மனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள அரசின் "பஸ் டே" அன்று நடந்த கோர விபத்து

கேரள மாநிலத்தின் அரசு பேருந்து துவக்கப்பட்ட நாளில் அரசு சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அம்மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி கேரள மாநிலத்தில் 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது.  நேற்று கேரள அரசு பேருந்து துவக்கப்பட்டு 82-ம் ஆண்டு தினமாகும்.  1938-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" எனும் பெயரில் பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தார். முதல் நாள் பேருந்து பயணத்தில் மன்னரும், அவரது உறவினர்களும் பயணம் செய்து முதல் அரசு பேருந்து பயணத்தை துவக்கி வைத்து உள்ளனர்.

1965-ம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. எனும் கேரள அரசின் போக்குவரத்து துறை துவக்கப்பட்டாலும், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" துவக்க நாளை அடிப்படையாக கொண்டே பிப்ரவரி 20-ம் தேதி பஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் அவிநாசி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து