முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்: ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் - ஜெயலலிதாவின் இலக்கை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று ஜெயலலிதா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது என்று பொன்னேரியில் ரூ. 217 கோடியில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனி்சாமி பேசினார்.

பொன்னேரியில் ரூ.217 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழர்கள் பண்டைய காலத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். தமிழ்நாட்டிலுள்ள கயல், கொற்கை, பூம்புகார், வஞ்சி போன்ற பண்டைய துறைமுகங்களின் வழியாக கிரேக்கம், சீனா, ரோமானியம் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுடன் தமிழ்நாடு அன்றைய காலக்கட்டத்திலே வாணிகம் செய்தது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். பன்னெடுங்காலமாக விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி, கலாச்சாரம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பிடம் பெற்று நல் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்று அம்மா வகுத்த பாதையில் பயணித்து, சட்டம் ஒழுங்கை செம்மையாகப் பராமரித்து, சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இங்குள்ள நான்கு பெரும் துறைமுகங்கள் மற்றும் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மூலமாக, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமும் தமிழ்நாடுதான். உலகெங்கும் உள்ள தொழில் முனைவோரை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. இவற்றில், 59 நிறுவனங்கள் ஏற்கனவே தமது வணிக உற்பத்தியை துவங்கி விட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. வணிகம் புரிதலை எளிதாக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், இணையவழி ஒற்றைச் சாளர முறை, பசுமை வகைப்பாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறும் வழிவகைகளை எளிதாக்குதல், முதலீடுகளைக் கண்காணித்து விரைவுபடுத்த, தொழில் துறையை ஊக்குவிக்க எனது தலைமையிலான உயர்மட்டக் குழு மூலம் பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வந்துள்ளது. எனது தலைமையிலான உயர்மட்ட குழுவினர், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றதன் பயனாக 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது துவக்கி வைத்துள்ள ஜோஹோ ஹெல்த் நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. கொரியாவின் ஹெனான் மற்றும் ஜப்பானின் மிட்சுபா சைகால் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளது தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழிற் சூழலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பூங்கா 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசின் இதுபோன்ற சிறப்பான முயற்சிகளுக்கு உறுதுணையாக உங்களைப் போன்ற வெளிநாடுகளின் தூதுவர்கள் பலர் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை மறக்க முடியாது.

போர்டு, ஹுண்டாய், யமஹா போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கும், புதிய பல முதலீடுகளை தமிழகத்தில் செய்வதற்கும், இங்குள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் சிறப்பான வழிகாட்டுதல்களையும், பெரும் பங்களிப்பையும் வழங்கி வருகின்றன. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டுப்பணி குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து வருகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, கொரியா, ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தொழில் துறையுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருக்கும் நீங்கள், தமிழ்நாட்டிற்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லதொரு இணைப்புப் பாலமாக திகழ வேண்டும். தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, உங்கள் நாட்டின் அரசு நிறுவனங்களும், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு நீங்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். சூழல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நம் நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை வரவேற்க ‘‘யாதும் ஊரே” என்ற திட்டத்தை நியூயார்க் நகரில் நான் துவக்கி வைத்துள்ளேன். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மின்சார வாகனப் பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, நிதி சேவைகளுக்கான நகரம், பாலிமர் பூங்கா, உணவுப் பூங்கா என முதலீடுக்குப் பல வாய்ப்புகள் இங்கு உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையிலும் அம்மாவின் அரசு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் Saas Capital of India என்று கூறும் அளவிற்கு பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. இதற்குக் காரணம், தமிழ்நாடு ஒரு அமைதியான மாநிலமாகவும், நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை முடித்து விட்டு, திறமை மிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அடுத்த கட்டமாக தொழில் பெருந்தடத் திட்டங்கள் அமையும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் நவீன உலக சூழலுக்கு ஏற்ப, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றும் சூழலை இத்திட்டங்கள் உருவாக்கும். சென்னை – பெங்களூர் தொழில் பெருந்தட திட்ட செயலாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக தேசிய தொழில் பெருந்தட மேம்பாட்டுக் கழகத்திற்கும், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி, உலகத்தை புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கினை வகித்து வருகிறது. எனவேதான், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று அம்மா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இந்திய வெளியுறவுத் துறையின் செயலாளர் திருமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளர் ஹரிஷ்,தேசிய தொழில் பெருந்தடத் திட்ட மேம்பாடு மற்றும் செயலாக்கக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் மூர்த்தி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கைடென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், தொழில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து