முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி வன்முறையை பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ம் தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம்  வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்.  கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்  தாஹிர் உசேன் வீடு ஒரு கலக தொழிற்சாலை என்பதை காட்டும் வீடியோக்கள் உள்ளன. வன்முறைக்கு தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை பார்த்தோம். ஆனால் இது குறித்து ஆம் ஆத்மி கட்சி மவுனம் சாதிக்கின்றது என்றும் ஜவடேகர் குற்றம் சாட்டினார். எனினும், வன்முறையின் போது மர்ம கும்பல் தனது வீட்டிற்குள் நுழைவது குறித்து போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்ததாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் கூறியுள்ளார். 

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள காஜூரி காஸ் பகுதியில் அமைந்த ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிரின் தொழிற்சாலையை போலீசார் சீல் வைத்து மூடியுள்ளனர். டெல்லி வன்முறையை அடுத்து சி.பி.எஸ்.ஈ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.  டெல்லி போலீசின் குற்ற பிரிவின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  வன்முறை தொடர்புடைய முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் இந்த குழுவுக்கு மாற்றப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து