முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்தால் தகுந்த பதிலடி தருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், அந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர் காக்கும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகள் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை அமெரிக்கா நம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப் பின், இந்த மருந்துகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது. ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மருந்துகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் கேட்டுக்கொண்டபின்பும் இந்திய அரசு மருந்துகள் ஏற்றுமதிக்கு அனுமதியளிக்காவிட்டால், எதிர்காலத்தில் நாங்களும் பதிலடி கொடுப்போம். எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், சர்வதேச சமூகத்தினரிடம் வலிமையான ஒற்றுமையையும், கூட்டுறவையும் இந்தியா எப்போதும் பராமரிக்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்டு வந்தோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் சூழல் கருதி, பாராசிட்டமால், மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை நம் அண்டை நாடுகளுக்கு, நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளோம். இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் இந்த மருந்துகளை வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தன எனத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து