முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா சாவு குறித்து விசாரணை நடத்தத் தயார் - சி.பி.ஐ.

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப் 2 - ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதை அடுத்து இந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய(2008) மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும் தி.மு.க.வை  சேர்ந்தவருமான ஆ.ராசா கைது செய்யப்பட்டு  தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது பல்வேறு மோசடி பிரிவுகளின் கீழ்  80,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. இன்று (2 ம் தேதி) தாக்கல்  செய்ய இருக்கிறது.

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்  தொடர்பாக ஆ.ராசா, டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவனத்தை  சேர்ந்த  ஷாகீத் பால்வா ஆகியோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆ.ராசா திகார்  சிறையில் இருந்த போது  அவரது நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சா தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது சாவில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆ.ராசா தான் சம்பாதித்த ஊழல் பணத்தில் ஒரு பகுதியை  சாதிக்பாட்சாவிடம்  கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாதிக்பாட்சாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.அதிகாரிகள் முயற்சி  செய்து வந்த நேரத்தில் சாதிக்பாட்சா மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இவரது சாவு குறித்து விசாரணை நடத்த தாங்கள் தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.தகவல் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பு சி.பி.ஐ. மூத்த வழக்கறிஞர்  கே.கே. வேணுகோபால் ஆஜராகி இது குறித்து சி.பி.ஐ.யின் விருப்பத்தை தெரிவித்தார்.

சாதிக்பாட்சாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.விருப்பமாக உள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அது குறித்த தகவலை  தங்களிடம்  சமர்ப்பிக்குமாறு  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  ஜெய்சிங்கை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

சாதிக் பாட்சா மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கான ஆணையை வெளியிடுவது  தொடர்பாக வருகிற 4-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்குமாறும்  நீதிபதிகள் அவரை கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்