முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.18 - அழகர் தங்க குதிரை வாகனத்தில் இன்று மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடியும் தருவாயில் உள்ள நிலையில் அழகர் கோவில் சித்திரை திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்குகிறது.  அழகர் கோவில் திருவிழாவில் அழகர் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வேடம் பூண்டு மதுரை வைகை ஆற்றில் இறங்குமா வைபவம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.  அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக சுந்தர்ராஜபெருமாள் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு அதிர் வேட்டுக்கள் முழங்க கள்ளழகர் வேடம் பூண்டு  தங்கப்பல்லக்கில் மலையை விட்டு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைத்ததோடு, அழகர் வரும் வழியில் எல்லாம் பக்தர்கள் திரண்டு நின்று அழகரை தரிசித்தனர். மறுநாளான நேற்று காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி வந்தடைந்தார்.அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மாலை 5 மணிக்கு அவுட் போஸ்ட் வந்தார். அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் எழுந்தருளுனார். இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் துவங்குகிறது. இன்று (திங்கட்கிழமை) சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே வைகை ஆற்றுக்குள் குவியத்தொடங்கி விட்டனர். அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் மேளம் தாளம் முழங்க நகர் முழுவதும் விடிய, விடிய ஆடிப்பானர்.

   பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு வரும் அழகருக்கு பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது ஒரே நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். இரவு 1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த சேவையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகர் இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெறுகிறது. அதிகாலை மோகனாவதாரத்துடன் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார். 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசிப்பார்கள்.

 

அழகர் மதுரைக்கு வரும் நோக்கம் தான் என்ன?

 

அழகர் மதுரைக்கு வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது, திருவிக்கிரமன் அவதாரத்தில் தோன்றிய வாமனன், முதல் அடியால் மேல் ஏழு உலகங்களை அளந்தார். பிரம்ம லோகத்தின் அதிபதியான பிரம்மா, கங்கை தீர்த்தத்தால் பிரம்மாவின் பாதத்தை சுத்தம் செய்தார். அப்போது பெருமாளின் பாத சிலம்பிலிருந்து சில நீர்த்துளிகள் அழகர் மலை மேல் விழுந்து ஆறாக ஓடியது. அதுவே நூபரகங்கை என்று அழைக்கப்படுகிறது.

   நூபுர கங்கை தீர்த்தத்தில் சுபதஸ்முனிவர் நீராடிக்கொண்டிருந்தார். துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் அங்கு வந்தார். அவரை கவனிக்காத சுபதஸ் தொடர்ந்து நீராடினார். ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர் மண்டூகமாய் கடவாய் என அவரை சபித்தார். இதற்கு விமோசனமே இல்லையா என சுபதஸ் முனிவர் வருந்தினார். வேதவகி  (வைகை) கரையில் வஞ்சக்கள்வன் முகம்  காணின் உன் வருத்தம் நீங்கும் என கூறிச்சென்றார் துர்வாச முனிவர். இதற்காகத்தான் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் மதுரை புறப்பட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்