முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபாவின் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புட்டபர்த்தி, ஏப்.26 - மறைந்த ஆன்மீக குரு புட்டபர்த்தி சாய் பாபாவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி  செலுத்தினர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆன்மீக குரு சாய்பாபா நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார்.

அவருக்கு தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில் அவரது சீடர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று லட்சக்கணக்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். புட்டபர்த்தி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த சாய்பாபாவின் பக்தர்கள் தங்களை விட்டு பிரிந்த தங்களது குருவுக்கு கண்ணீர்மல்க மலர் அஞ்சலி செலுத்தினர்.

புட்டபர்த்தி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  பல ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீண்ட கியூ வரிசையில் நின்று சாய் பாபாவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி மக்கள் கூட்டம் புட்டபர்த்தியில் அலை மோதி வருகிறது.

பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து அவருக்கு அஞ்சலி செய்ய ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியோர்களும் முண்டியடித்துக்கொண்டு முன்னேறிச்சென்றனர்.

சாய்பாபாவின் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பொறுமையுடன் வரிசையில் நின்று சென்றனர்.

மத்திய மந்திரிகள் விலாஸ்ராவ் தேஷ்முக், பிரபுல்  பட்டேல்,  பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுமார் ஒரு மாத காலமாக உடல்நலம் குன்றியிருந்த 85 வயதான சத்ய சாய்பாபா நேற்று முன்தினம் காலமானார். 

அவரது உடல் இன்று வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அதே மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அவரது உடல் வருகிற புதன் கிழமை அனந்தபூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்றையதினம் அனந்தபூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்