முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் குத்தி கொலை ``மண்டபம்'' படநடிகர் தமிழரசன் கைது

திங்கட்கிழமை, 9 மே 2011      சினிமா
Image Unavailable

 

உத்தரமேரூர், மே.10 - மதுராந்தகம் அருகே, சென்னையைச் சேர்ந்த பெண் கத்தியால் சரமாரி குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் ``மண்டபம்'' படத்தில் நடித்த நடிகர் தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பலி கூறப்படுவதாவது:-

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு சினிமா உலகில் நுழைந்தார். மண்டபம் உள்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திருவல்லிக்கேணி ஆனந்த விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கவிதா (45). ஒரு வழக்கு தொடர்பாக கவிதா நடிகர் தமிழரசனை சந்தித்தார். 

இதையடுத்து கவிதாவுக்கு ஆதரவாக தமிழரசன் செயல்பட்டார். இந்த நிலையில் நேற்று வழக்கு விஷயமாக சிலரை சந்திப்பதற்காக நடிகர் தமிழரசன், கவிதா, இவர்களது தோழியான துணை நடிகை அலமேலு ஆகிய 3 பேரும் ஒரு காரில் மதுராந்தகம் சென்றனர். இந்த நிலையில் பழைய சீவரம் அருகே ஆற்றங்கரையில் கவிதா கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆற்றில் மணல் எடுக்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், கருணாநிதி இருவரும் கவிதாவிடம் சென்று பேச்சுக்கொடுத்தனர். அப்போது கவிதா, சென்னையைச் சேர்ந்த தமிழரசன் என்பவர்தான் என்னை இங்கு அழைத்து வந்து கத்தியால் குத்தினார் என்று கூறினார். உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து கவிதாவை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவிதாவின் உயிர் பிரிந்தது. 

இதற்கிடையே நடிகர் தமிழரசன், செங்கல்பட்டு பெண் டி.எஸ்.பி. பொன்னியை சந்தித்து பதட்டத்துடன் புகார் ஒன்றை தெரிவித்தார். நானும் கவிதா என்ற பெண்ணும் சென்னையில் இருந்து இங்கு வந்திருந்தோம். பழைய சீவரம் பெருமாள் கோவில் அருகே நான் காரை நிறுத்தி இருந்தேன். கவிதா சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்த தரைப்பாலத்திற்கு அருகில் சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் அவரை கடத்திச்சென்று விட்டது என்று கூறினார்.

இது தொடர்பாக டி.எஸ்.பி. பொன்னி, நடிகர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே சாலவாக்கம் போலீசார் கவிதா கொலை செய்யப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கவிதா உயிரை விடுவதற்கு முன்னர் தமிழரசன் தான் தன்னை கத்தியால் குத்தினார் என்று கூறிய விவரத்தை போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக தமிழரசன் கடத்தல் நாடகம் ஆடியது தெரிவந்தது. அவர் எதற்காக கவிதாவை கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தமிழரசன் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்திலும், வக்கீல்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசனுடன் சென்ற துணை நடிகை அலமேலுவும் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திடீரென அவர் வயிறு வலிப்பதாக கூறினார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரிடமிருந்து கவிதா கொலை தொடர்பாக எந்தவித தகவல்களையும் போலீசாரால் திரட்டமுடியவில்லை.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, விசாரணைக்கு பயந்து துணை நடிகை அலமேலு, கண்ணை மூடிக் கொண்டு மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னர் கவிதா கொலை குறித்து அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago