முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?

புதன்கிழமை, 1 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.1 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்த அவர், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதை கண்டறிந்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் தொலைத் தொடர்பு துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். 

வினோத்ராயின் இந்த அறிக்கை தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 2 ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்கு குழு வினோத்ராயை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதையேற்று அவர் பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராகி எவ்வாறு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார். 

அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. இதனால் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது. இதில் சந்தேகமில்லை என்று பொதுக்கணக்கு குழுவிடம் வினோத்ராய் உறுதியாக தெரிவித்தார். 

இந்நிலையில் 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை விசாரித்து வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழுவும் வினோத்ராயை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து அவர் நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நான் கண்டறிந்துள்ளது குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழ வேண்டிய அவசியமில்லை. ஆதாரத்தின் அடிப்படையில்தான் இழப்பு தொகையை எனது அறிக்கையில் பதிவு செய்துள்ளேன். எனவே 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது விதிமுறையை சரிவர பின்பற்றாததும் அதனால் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் உண்மைதான் என்று ஜே.பி.சியிடம் வினோத்ராய் கூறியதாக தெரிகிறது. 

வினோத்ராயின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நாடாளுமன்ற கூட்டு குழுவினர் கடந்த 1998 - 2009 கால கட்டத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்