முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுடன் இன்று மாயாவதி பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

லக்னோ, ஜூன் 2 - உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த போராட்டங்களை தணிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அம்மாநில விவசாயிகளுடன் முதல்வர் மாயாவதி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பாட்டா- பர்சால் என்ற கிராமத்தில் நிலம் கையகப்படுத்தியது தொடர்பான பிரச்சனையில் அப்பகுதி விவசாயிகள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த ராகுல்காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் இந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 2 போலீசார் உள்பட சிலர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இதனால் உ.பி.யில் விவசாயிகள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துவருகிறது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உ.பி. முதல்வர் மாயாவதி ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதன்படி உ.பி. விவசாயிகளை அழைத்து மாயாவதி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டு அவற்றுக்கு தீர்வுகாணவும் அவர் முடிவு செய்துள்ளார். 

நில ஆர்ஜித பிரச்சனை மட்டுமல்லாமல் மின்விநியோகம், விதைகள் மற்றும் உரப்  பற்றாக்குறை, கோதுமை கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவசாயிகளுடன் மாயாவதி பேச இருக்கிறார். மேலும் விவசாயிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளையும் மாயாவதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்