முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதா? சுப்ரீம் கோர்ட்டு இன்று ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 20 - டெல்லி ராம்லீலா  மைதானத்தில் கடந்த 5-ம் தேதி  ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்களா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று ஆய்வு செய்கிறது. கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக பிரபல யோகா குரு பாபா ராம் தேவ் கடந்த 4-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அன்று நள்ளிரவு   ராம்தேவை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி  விமானம் மூலம் டேராடூன் கொண்டு சென்றனர். பிறகு டேராடூனில் இருந்து அவர் கார் மூலம் அவரது ஆசிரமம் அமைந்துள்ள   ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அன்று நள்ளிரவு டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்த ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிறகு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இது குறித்த செய்திகள்  வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் பரபரப்புடன் வெளியிடப்பட்டன. இந்த சம்பவத்திற்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் பல அமைப்புகளும்  கடும் கண்டனம்  தெரிவித்தன.

இந்த  நிலையில் இந்த சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு  வழக்கை பதிவு செய்தனர்.

இந்த  வழக்கு விசாரணைக்கு பிறகு  ராம்தேவ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல்  செய்யும்படி  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் டெல்லி  மாநில தலைமை செயலாளருக்கும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கும்  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள்  நோட்டீஸ் அனுப்பினர். 

இந்த நோட்டீசிற்கு டெல்லி போலீசார்  தங்களது பதில் மனுவை  தாக்கல் செய்தனர். அந்த  அறிக்கையில் ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது  தாங்கள் தடியடி நடத்தவில்லை என்றும் 8 கண்ணீர் புகை குண்டுகளைத்தான்  வீசினோம் என்றும் டெல்லி  போலீசார் கூறியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசாரின் இந்த பதில் மனு மீது  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர்  கொண்ட டிவிஷன் பெஞ்ச் இன்று ஆய்வு  செய்கிறது. 

மேலும் தடியடி பிரயோகம் செய்ய வில்லை என்று கூறும் டெல்லி போலீசாரின்  கூற்றை  ஏற்றுக்கொள்ள மறுக்கும்  வக்கீல்  அசோக் அகர்வால் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

சம்பவம் நடந்த ராம்லீலா மைதானத்தில் கைப்பற்றப்பட்ட 42 சி.சி. டி.வி. கேமிராக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்  அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு மீதும் இதே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்