முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.3 - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அனந்த பத்மநாபசாமி கோயிலின் பாதாள அறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட விலை மதிப்புள்ள ஆபரணங்களை பாதுகாக்கும் பொருட்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள புராதனமான அனந்த பத்மநாபசாமி கோயில் திருவிதாங்கூர் ராஜவம்சத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள பாதாள அறைகளில் விலை மதிப்பில்லாத செல்வம் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனந்தபத்மநாபசாமி கோயிலின் பாதாள அறைகளை கேரள ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேர் அடங்கிய ஆய்வு குழுவினர் கடந்த 27 ம் தேதி முதல் திறந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நூற்றாண்டு காலமாக பூட்டியே கிடந்த அந்த பாதாள அறைகளில் விலை மதிப்பில்லாத வைர, வைடூரிய ஆபரணங்களும் விலை மதிப்பில்லா நவரத்தின கற்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வு குழுவினர் இந்த ஆபரணங்களை ஆவணப்படுத்தி மதிப்பிட்டு வருகின்றனர். இவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. 

இருப்பினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்களின் மதிப்பு பற்றி கருத்து கூற ஆய்வுக் குழுவினர் மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து இக்கோயிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் உம்மன் சாண்டி, பாதாள அறைகளில் உள்ள ஆபரணங்களை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து வருவதால் கோயிலுக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பலமாக இருந்தாலும் பாதுகாப்பை அதிகரிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்