முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை, தீவிரவாதம் ஒழிக்கவேண்டும் மதுரை ஆதீனம் சுதந்திரதின வாழ்த்து

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.- 15 - நாட்டில் வன்முறை தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்று மதுரை ஆதீனம் விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.இது குறித்து மதுரை ஆதீனம் கூறியிருப்பதாவது; இந்தியத்திருநாடு, உலகிலேயே எல்லா வகைகளிலும் சிறப்பு மிகுந்த நாடு, மக்களுக்கு நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு, இறைஅச்சம் மிகஉண்டு. அறிவும், ஆற்றலும், தொண்டும், தியாகமும், பிற உயிர் களின் மீது இரக்கமும், கருணைச் செயலும், சலியாத உழைப்பும், கலை ஆற்றலும், விஞ்ஞான நுணுக்கமும், மொழிப்பற்றும், இனப்பற்றும் போன்ற அனைத்து உயிரிய தன்மைகளும் கொண்டிலங்கும் செம்மைமிகு நாடு, நமதுநாடு.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது நாடு இன்று மிகப்பெரிய பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறது. ஆம்மெகா மெகா ஊழல்கள், லஞ்சம்,மிரட்டல், மோசடி, அச்சுறுத்தல், மதுபோதை, பணிவு இல்லாமை, இவைகளில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. பள்ளிச்சிறுவர் முதல் பெரியோர்கள் வரை போதை மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள் இவற்றைக்காணும் நாட்டின் நலன் கருதும் நல்ல உள்ளங்கள் மிகுந்த வேதனை கொண்டிக்கிறது. பெரும்பாலும் யாருக்கும் பொறுப்புணர்வு இல்லவே இல்லை. இரண்டு சக்கரவாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவோர் எவரும் கவனத்தோடு இயக்குவதில்லை. ரோட்டில் எங்கு நோக்கினும் தினசரி விபத்துக்கள், மரணங்கள், படுகாயங்கள், இவைகளையே காண்கின்றோம். இவை மாத்திரமா? கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தற்கொலை இவைகளாலும் நாடு சுயநினைவு இல்லாமல் கோமா நிலையில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மூலகாரணம், பணப்பேராசை, பதவிப்பேராசை, ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக்கூடாது. எந்தப்பற்றாக்குறையும் இல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன, இருப்பது போதும் என்ற திருப்தி எவருக்கும்இல்லை. ``ஆசைக்கோர் அளவில்லை, அகிலத்தைக் கட்டி ஆன்டாலும் கூட'' எந்தத் துறையிலும் உழைப்பிற்கும், தொண்டுக்கும், தியாகத்துக்கும் மரியாதை இல்லை நாட்டின்நலன் கருதும் தலைவர்களுக்கும், வள்ளல்களுக்கும், மரியாதை இல்லை. தொண்டு செய்கிறவர்களை நன்றாகப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து எல்லா உதவிகளையும் பெற்றுக்கொண்டு கருவேப்பிலையைப் போல தூக்கி எறிந்து விடுவதுதான், அரசியல்வாதிகளுடைய வேலையாகப் போய்விட்டது. 

சுதந்திரம் என்றால், ``சுயநலசுதந்திரம்'' என்ற புதிய பொருளை உருவாக்கி விட்டார்கள். இந்த மயக்கத்திலிருந்து நாடு எப்போதுதான் மீண்டுவரும் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான படுமோசடிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள் எப்போதுதான் திருந்தி மனிதத்தன்மை உடையவர்களாக மாறுவார்களோ? என்பதுதான் நல்ல உள்ளங்களின் ஏக்கம் நம்நாட்டிற்கு இன்று நல்லவர்கள் தான் தேவை, வல்லவர்கள் தேவையல்ல. நல்லவர்களை நாட்டின் நலம் கருதும் தலைவர்களை தியாகிளை மதிக்கவில்லையானால் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் நாம் மீளவே முடியாது. இந்த விஷயத்தை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டியவர்கள், அரசியல்வாதிகளும், அரசாங்கங்களுமோயாகும். எனவே நாடு, விரைவில்,நலமடையவும், வன்முறை தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை ஒழிந்து, சமரச வாழ்கை மலர்ந்து ஓங்கிடவும், எல்லோரும் ``மண்ணில் நல்ல வண்ணம்'' வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்தித்து இச்சுதந்திரதின நன்நாளில் அனைவருக்கும் அருளாசி வழங்கி, ஆசீர்வதிக்கின்றார். தவத்திரு மதுரை ஆதீனம் 292 -வது குருமகா சன்னிதானம்.  எல்லோருக்கும் ஆசீர்வாதம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்