முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பிரதமருடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.2 - முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை கட்ட ஏற்பாடுகள் செய்து வரும் கேரள அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று (டிச.2) டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-  

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற புரளியை கேரள மக்களிடையே கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை அரசியல் ஆதாயத்திற்காக கேரள அரசு தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த வழக்கை தீர விசாரித்த உச்ச நீதிமன்றம், வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது தான் என்றும், எனவே அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், ஆய்வுக்குப் பிறகு அணையின் நீர் மட்டத்தை மேலும் படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு சற்றும் மதிப்பளிக்காமல், அதனை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில், 18.3.2006 அன்று கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தினை கேரள அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து எனது  தலைமையிலான தமிழக அரசால் உடனடியாக 27.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய அதிகாரக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், கேரள அரசு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதை பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மக்களிடம் ஓர் அச்ச உணர்வை கேரள அரசு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் முயற்சியை கைவிடவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தவும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். இருப்பினும், கேரள அரசு இந்தப் பிரச்சனையை தொடர்ந்து பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதால், மு. தம்பிதுரை, எம்.பி.  தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை இன்று (2.12.2011) காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு குறித்த கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago