முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ மண்டலத்தை காப்பாற்ற கடும் விதிமுறைகள் அமல் பிரிட்டன் தவிர 17 நாடுகள் ஒப்புதல்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

பிரஸ்ஸல்ஸ், டிச. - 12 - யூரோ மண்டலத்தில் நிலவும் நிதி தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு, செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் இந்த யூரோ கூட்டமைப்பு மண்டலத்தில் உள்ள 27 நாடுகளில் யூரோவை பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டுமே இந்த தீர்வை உடனடியாக ஏற்றுக் கொண்டன. யூரோவை பயன்படுத்தாத பிரிட்டன் இந்த திட்டத்தில் இருந்து விலகி நிற்பதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சுவீடன், ஹங்கேரி, செக், டென்மார்க், போலந்து, லாட்வியா, அயர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகள் தங்களது நாடாளுமன்றங்களில் இது குறித்து ஆலோசித்து விட்டு முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த 2 நாட்களாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் யூரோ மண்டல பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.  இக்கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க இந்த நாடுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்தில், ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் ஆண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்தை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பொதுக் கடன் ஜி.டி.பியில் 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இந்த விதிகளை தங்களது நாடுகளின் அரசியல் சாசனங்களில் திருத்தங்கள் செய்து சேர்க்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும் போது உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஐரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம் என்ற நிரந்தர அமைப்பு 2012 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட தொடங்கும். இந்த அமைப்புக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 666 பில்லியின் டாலர் நிதி போதுமா என்பது ஆராயப்பட்டு தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும். கடனில் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக சர்வேதேச நிதியத்திற்கு கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கப்படும். இந்த நிதியை பொருளாதார பலம் கொண்ட ஐரோப்பிய யூனியன் மற்றும் யூரோ மண்டல நாடுகள் வழங்கும். வரும் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இந்த திட்டத்துக்கு யூரோ மண்டலத்தில் உள்ள 27 நாடுகளிடம் இருந்துமே சம்மதத்தை பெற இந்த திட்டங்களை முன்வைத்த ஜெர்மனியும் பிரான்சும் முயன்றன. ஆனால் அதை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்காததால் இது ஒரு ஐரோப்பிய ஒப்பந்தமாக ஆகாமல், அதற்கும் குறைவான நாடுகள் இடையிலான ஒரு உடன்படிக்கையாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில நிதி ஒழுங்கு முறைகளில் இருந்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் திட்டவட்டமாக கூறி விட்டதோடு உடன்படிக்கையை ஏற்கவும் மறுத்து விட்டார். இந்த உடன்படிக்கையை ஏற்பது பிரிட்டனின் நலன்களுக்கு உகந்ததல்ல என்பதால் பிரிட்டன் இதில் கையெழுத்திடவில்லை என்றும் கேமரூன் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்