முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமாநிலத்தவர் பட்டினியாக இருக்கக்கூடாதென்பதே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கம்: அமைச்சர் காமராஜ் விளக்கம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

வெளிமாநிலத்தவர் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கமாகும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஜெயலலிதா எந்த வழியை எங்களுக்குக் காட்டினார்களே,அந்த வழியில் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி  பழனிசாமி ,தமிழகத்தின் உணவுத்துறையை மேலும் செம்மைப்படுத்தி,பொதுமக்களுக்குப்  பொதுவிநியோக திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதனுடைய நடவடிக்கைகளை, அன்றாடம்   கவனித்து, அதற்குஏற்ப எங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார். அந்த அடிப்படையில்   தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டம், வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்தியாவில் வேறு எங்கும்  இல்லாத அளவில் தமிழகத்தில்மட்டும்தான், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.

எல்லா மாநிலங்களும் குறிப்பிட்ட அளவுக்குப் பொருட்கள் வழங்கும் நிலையில் தமிழகத்தில்  மட்டும்தான், அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதன்  அடிப்படையில் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன்கார்டு திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்த 3-ம் தேதி  மாநில உணவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள், குடும்ப அட்டைகளைகணினி  மயமாக்குதல், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது. அந்த   கூட்டத்திலும் ஒரே நாடு,ஒரே ரேஷன்கார்டு குறித்துக் குறிப்பிட்டுப் பேசவில்லை.

இருந்தபோதிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவியதால் நான் அதற்கு பதில் அளித்துப் பேசினேன். நமது  மாநிலத்தில் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இதில் எந்த  மாற்றமும் கிடையாது. ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்துவதால்  நமக்கு எந்த பாதிப்பும் வராது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் என்பதை காங்கிரஸ் அரசு 2013-ம்  ஆண்டில் கொண்டுவந்தது. இதற்கு திமுக ஆதரவு அளித்தது. அன்றைக்கு திருத்தப்பட்ட மசோதா   வந்தால்தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று, ஜெயலலிதா தெரிவித்தார். திருத்தப்படாமல் மசோதா  கொண்டுவரப்பட்டது. இதை ஆதரித்து வாக்களித்தவர்கள் திமுகவினர். அன்றைக்கு இந்த திட்டத்தைப்  போற்றும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியாவை மணிமேகலை என்று வர்ணித்தார்.

எங்களைப் பொறுத்தவரை அந்த மசோதா திருத்தப்படாமல் வந்த காரணத்தால் அதனை எதிர்த்து  வாக்களித்தோம்.பின்பு திருத்தப்பட்டு வந்த காரணத்தினால் 2016 ம் ஆண்டு இதனை செயல்படுத்த  ஒத்துக்கொண்டோம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தேசிய உணவு  பாதுகாப்பு திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தினால் தமிழகம் பாதிக்கப்படும் என்றுபலர்  தெரிவித்தனர். எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த திட்டம் சென்றுகொண்டுள்ளது. தேசிய உணவு  பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கம்தான் இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்.வெளிமாநிலத்தவர்  பட்டினியாக இருக்கக்கூடாது என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அவர்களுக்கு அரிசியோ, கோதுமையோ வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அரிசி அல்லது  கோதுமையை மத்திய தொகுப்பிலிருந்து மத்திய அரசு நமக்குத் திருப்பி அளித்துவிடுகிறது. இதனால்  மாநில அரசுக்கு எந்த ஒரு நிதிச் சுமையும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து