முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு - சந்தனப் பொட்டு வைத்து பூஜை நடத்தினார் ராஜ்நாத்சிங்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

பாரிஸ் : பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை நேற்று முறைப்படி பெற்றுக் கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.  அப்போது சந்தனப் பொட்டு வைத்து ஓம் என எழுதி பூஜை நடத்தினார் ராஜ்நாத்சிங். மேலும் விமானத்தின் டயர்களுக்கு கீழ் எலுமிச்சம் பழம் வைத்தும் பூஜை நடத்தினார் ராஜ்நாத்சிங்.

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதனை பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் மெக்ரானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது , இருநாட்டு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் மெரிக்னா நகரில் நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான முதல் ரபேல் போர் விமானம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ரபேல் விமானத்துக்கு சாஸ்திரி பூஜா எனப்படும் ஆயுத பூஜையும் ராஜ்நாத்சிங் நடத்தினார். பின்னர் அந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் மேற்கொண்டார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். ரபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன்.  இந்திய விமானப்படைக்கு இது வரலாற்று சிறப்புமிக்க என்று கூறினார்.

1,389 கி.மீ. வேகத்தில் செல்லும் ரபேல் விமான நீளம் 15.3 மீட்டர், 5.3மீ உயரமும், 10,000 கிலோ எடையும் உடையது. 10,000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. ரபேல் விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. வரை பறக்கும் திறன் கொண்டது. இரட்டை இன்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானம் ஆகும். இந்த விமானத்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் 4 பிளஸ் பிளஸ் தலைமுறை ஏவுகணைகளாகும். இவை குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும், ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சக்திவாய்ந்த போர் கருவிகள், ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்த ஏற்றது என்பதால் இந்திய ராணுவத்திற்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பிரான்ஸிடமிருந்து வாங்கப்படும் 36 ரபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப்படைத் தளம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்கு வங்கத்தில் ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில் ரபேல் போர் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து