முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்புறவு பேச்சுவார்த்தைக்காக மாமல்லபுரம் வரும் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் - தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நட்புறவு பேச்சுவார்த்தைக்காக மாமல்லபுரம் வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில்நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத் தலைவர்களையும் வரவேற்கின்றேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும் அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கியதுமான மாமல்லபுரத்தை இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என நான் கருதுகிறேன். சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதே போல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956-ம் ஆண்டு, சீன நாட்டு பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ளகுழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யூனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன நாட்டு ஜனாதிபதியின் வருகை தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து