Idhayam Matrimony

தலைவர்களின் கருத்தில் உடன்பாடில்லை: காங்கிரசுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் - சென்னையில் டி.ஆர். பாலு பரபரப்பு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறி விட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தி.மு.க. தலைமை கோபமடைந்தது. இதையடுத்து குடியுரிமை  சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் மேலிடம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தி.மு.க. பங்கேற்காமல் புறக்கணித்தது. பங்கேற்காமல் புறக்கணித்தாலும் காங்கிரஸ் தலைவர்களிடம் தங்கள் அதிருப்தியை தி.மு.க. தலைமை தெரிவித்தது.

அதை தொடர்ந்து சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியது குறித்து விளக்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமியும் முன்வைத்த குற்றச்சாட்டின் காரணமாகவே, காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை .கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால், தி.மு.க.வினர் வருத்தத்தில் இருக்கின்றனர், அதை அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பி விட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர். பாலு, காங்கிரசுடனான கூட்டணி பற்றி காலம்தான் பதில் சொல்லப் போகுது. இப்போது  என்ன அவசரம். கூட்டணி குறித்து போஸ்ட்மார்ட்டம் செய்ய முயல்கிறீர்களா? அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவர் அறிக்கை அளித்துள்ளதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் டி.ஆர்.பாலு இவ்வாறு தெரிவித்திருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகவே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து