முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10,276 போலீசார் புதிதாக நியமனம்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

இந்த ஆண்டு (2020–21) 10 ஆயிரத்து 276 போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

பொருளாதார வளர்ச்சியையும், மக்கள் நல்வாழ்வினையும் பேணுவதற்காக, சட்டம் ஒழுங்கை திறம்படக் கையாள்வது முக்கியமானதாகும். மாநிலக் காவல் படை தனது பணிகளை திறம்பட மேற்கொள்வதை உறுதி செய்ய, போதுமான காவலர்கள், தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை காவல் துறை பெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.13 லட்சம் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2019–20 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2020–21ம் ஆண்டில், மேலும், 10,276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும் கணினி வலையமைப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அமைப்பு முறை, 54.84 கோடி ரூபாய் செலவில் மேலும் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை அதிகரிக்கவும், 28.97 கோடி ரூபாய் செலவில் இணையதள குற்றத் தடுப்புக் காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 431 கோடி ரூபாயும், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும் உட்பட, மொத்தமாக 8,876.57 கோடி ரூபாய் காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் பிற பேரிடர் நிவாரணப் பணிகளில் துரித தீர்வு அளிக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை உணர்ந்து, தேவையான இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை அவ்வப்போது அரசு தொடங்கி வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் எண்ணிக்கை இப்பொழுது 346 ஆக உள்ளது. 2019-20 ம் ஆண்டில் 18.22 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்கும் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 104 மீட்டர் தீயணைப்பு ஏணிகள் உட்பட நவீன தீயணைப்பு மீட்புக் கருவிகள் வாங்குவதற்காக 13.67 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக 1,000 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு முன்மொழிவுகளை அனுப்பும். 2020-21 ம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள், மனிதநேயத்திற்கும், சீர்திருத்த அணுகுமுறைக்கும் நற்பெயர் பெற்றவை. சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவர்களின் பராமரிப்புக்காகப் பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவர்களின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். ஒரு புதிய தொடக்க முயற்சியாக, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சிறைகளின் வெளி வளாகங்களிலும், புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளியிலும் 5 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வரும் நிதியாண்டில், மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். 2020 - 21ம் ஆண்டில், சிறைத் துறைக்கு 392.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது, 2020-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018-ம் ஆண்டில், சிறப்பான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை அரசு உருவாக்கும். இந்த இயக்கம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துகளை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.

நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து