முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ளவே பத்திரிகைகளில் விளம்பரம்: பொய் பிரச்சாரம் செய்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ளவே அரசின் திட்டங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் பொய் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் இன்னும் 10- 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அ.தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம், ஆனால் தி.மு.க.வுக்கு மக்களிடமிருந்து எடுத்து தான் பழக்கம் என்றும் அவர் கூறினார்.

5-வது கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  2 வது நாளாக நேற்று ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் தொகுதி கணபதி நகர், கைனூர் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அவர், அரக்கோணத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:–

அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்த கட்சி, அது மட்டுமல்ல தொண்டர்களால் ஆளப்படும் ஒரே ஆட்சி அ.தி.மு.க. ஆட்சியாகும்.  கொடுத்து, கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. அதன் பிறகு இந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல, காத்தவர் அம்மா.  அ.தி.மு.க ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றோம். 

ஆனால் எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். எவ்வளவு ரூபாய் செலவு செய்கின்றார்கள் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். என்னென்ன திட்டங்கள் செய்திருக்கின்றோம் என்று உங்களைப் போல் உள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றோம். 

ஸ்டாலின் தெரிந்து கொள்ளவே விளம்பரம்

மேடை பேச்சு பேசும் போது ஒரு எதிர்கட்சித் தலைவர், தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி கிழிச்சது என்ன என்று கேட்கிறார். நாங்கள் கிழித்ததை தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நீ சட்டமன்றத்திற்கு வருவதில்லை, அரசாங்கம் போடும் திட்டங்களையும் பார்ப்பதில்லை, நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்பதில்லை. அப்புறம் நீ என்ன தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே, எதிர்கட்சி தலைவர் தெரிந்து கொள்வதற்காக, தி.மு.க. தலைவர் தெரிந்து கொள்வதற்காக, எதிர்கட்சிகள் எல்லாம் இந்த அரசாங்கம் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக நாங்கள் பத்திரிகை வாயிலாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், வேண்டுமென்றே இட்டுகட்டி பொய் பிரச்சாரம் செய்து பரப்பி வருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த செய்திகள். ஆகவே, உண்மை நிலையை தெரிந்து கொண்டு பேசுங்கள். நான் தெளிவாக சொன்னேன், நான் எந்த இடத்திற்கும் வேண்டுமானாலும் வருகிறேன், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று சொல், எங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். ஆனால் வர மாட்டேன் என்கிறார். ஏன் என்றால் செய்திருந்தால் தானே வர முடியும். நான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். என்னென்ன திட்டங்களை எல்லாம் செய்தோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன். அவரால் ஒன்று சொல்ல முடியுமா?.

ஏழை எளிய மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நாங்கள் கொடுத்து, அவர்களை கல்வி கற்க வைத்து, உயர செய்கிறோம். உங்கள் ஆட்சியிலே இதெல்லாம் கிடையாது. அரக்கோணத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுத்து ஏழை எளிய குடும்பத்திலே பிறந்த மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்து கல்வி தரத்தை உயர்த்திய அரசு எங்கள் அரசு.

பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ். படிக்கக்கூடிய அந்த மருத்துவக் கல்லூரிகளையும் நாங்கள் தான் அதிகமாக கொண்டு வந்திருக்கின்றோம். ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்திருக்கின்றோம்.

ஏற்கனவே நான் சட்டமன்றத்தில், சட்டசபை விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் அமைத்து 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் தமிழ்நாடு முழுவதும் வாங்கி இருக்கிறோம். என்னுடைய மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் நானே போய் வாங்கினேன். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்திலே மனுக்களை வாங்கினோம். அதில் 5 லட்சத்து 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இது சாதனை. 

அதுமட்டுமல்ல, அம்மா திட்டம். அம்மா இருக்கின்ற போது ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வருவாய் துறை அதிகாரிகளை அனுப்பி அந்தப் பகுதியிலே மக்களுக்கு என்ன குறைகள் இருக்கிறது என்று கேட்கப்படுகிறது, வருவாய் துறை சம்பந்தமான குறையாக இருந்தால் அங்கேயே அந்த குறை தீர்க்கப்படுகிறது. மற்ற துறைகளின் குறையாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்த அரசு அம்மாவின் அரசு. இரவு பகல் பாராமல் உழைக்கும் விவசாயிகள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்த அரசு அம்மாவின் அரசு. அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் 10–15 நாட்களில் விவசாயிகளின் பயிர்கடன் ரத்திற்கான ரசீதுகளும் வழங்கப்படும். எதை சொன்னாலும் அதை செய்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து