முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிக்கை: மக்களின் இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

திங்கட்கிழமை, 15 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க மக்களுக்கு பலன் அளிக்கின்ற அறிக்கை என்றும் மக்களின் இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

புரட்சித் தலைவி அம்மா 1989-ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கி, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு பல வாய்ப்புகளை அம்மா அளித்து, அவர்களின் மாபெரும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்று எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நான் செயல்படுத்தியிருக்கின்றேன்.

அம்மா எனக்கு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வழங்கி, எனக்கு வாய்ப்பைக் கொடுத்து, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பல நன்மைகள் செய்வதற்கு அவர்களின் ஆசியோடு ஒரு அரிய வாய்ப்பை தந்தார்கள். அந்த வாய்ப்பின் மூலமாக எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் முழுமையாக கிடைப்பதற்கு நான் அரும்பாடு பட்டுள்ளேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 கேள்வி: சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கைகள் வைத்தார்கள். இப்போது, தேர்தல் நேரத்தில் நீங்கள் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனரே?

பதில்: மக்கள் மன்றத்தில் எடுபடுகிறதா? இல்லையா? என்பது தேர்தல் முடிவில் தெரியும். தேர்தலில் அ.தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிக்கையாக உள்ளது. பல்வேறு அடித்தட்டு மக்களிலிருந்து உயர் தரப்பு மக்கள் வரையில் இந்தத் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார்கள். பல சமூக ஆர்வலர்களும், வேளாண் பெருமக்களும் வியாபார பெருமக்களும், பல்வேறு தரப்பினரும் வரவேற்கிறார்கள். 

கேள்வி: ஏற்கனவே 6 இலட்சம் கோடி கடன் சுமை இருக்கும்போது இது சாத்தியமா? என்று தினகரன் கேட்டுள்ளாரே? 

பதில்: இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடன் இருந்து கொண்டுதான் இருக்கிறது, எந்த மாநிலத்தில் கடன் இல்லை? ஆனால், வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியின் பலம் எவ்வாறு உள்ளது?

பதில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.

கேள்வி: இந்தத் தொகுதியில் எதை முன்னிறுத்தி நீங்கள் வாக்கு சேகரிப்பீர்கள்?

பதில்: மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை நான் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கைகள் வருமென்று எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு வரப்பெற்ற கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். நான் ஏற்கனவே சட்டமன்ற வேட்பாளராக இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது இந்தத் தொகுதி மக்கள், அவர்களின் குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட். கல்லூரி கொண்டு வந்து ஏழை குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளேன்.

நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவேரி தண்ணீரை வழங்கியிருக்கின்றேன். அதிகமான அம்மா மினி கிளினிக் திறந்து அந்தந்தப் பகுதிகளிலேயே மருத்துவ சிகிச்சை கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளேன். பல ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்கள், அதிகமான நியாய விலைக் கடைகள் திறந்துள்ளேன். அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளேன். கிராமச் சாலைகளிலிருந்து நெடுஞ்சாலை வரை சிறப்பான சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்று, அமைச்சராகி, முதலமைச்சரானவுடனேயே மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஏறத்தாழ 19 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். எடப்பாடிக்கு புறவழிச்சாலை, மின் கோட்டப் பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் கொடுத்துள்ளேன். மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேள்வி : சி.ஏ.ஏ தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறீர்கள், ஆனால், பி.ஜே.பி.-யில் இருக்கக்கூடிய  ரவி இது சாத்தியமில்லை என்று அறிவித்திருக்கிறாரே? 

பதில்: மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நான் ஏற்கனவே சொன்னேனே. எங்களுடைய அரசு, மத்திய அரசை வலியுறுத்தும் என்று தான் தெரிவித்திருக்கிறேன்.  சிறுபான்மை மக்களை பாதுகாக்கக்கூடிய அரசு அம்மாவினுடைய அரசு. அதன் வழியிலே சிறுபான்மை மக்கள் வைத்த கோரிக்கையை எங்களுடைய அரசு, மத்தியிலே  வலியுறுத்தும்.

ஒட்டுமொத்த கழகத்தின் நிர்வாகிகள், துணை முதலமைச்சர், நானும் ஒன்றாக இணைந்து ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற விதமாக, எங்களுடைய மூத்த கட்சித் தலைவர்கள் , மூத்த அமைச்சர்கள், கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்கள் எல்லோரும் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றோம். இது, மக்களுக்கு முழுக்க முழுக்க பயனளிக்கின்ற தேர்தல் அறிக்கை. 

கேள்வி: எடப்பாடி தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை செய்யவுள்ளீர்கள்?

 

பதில்: மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ, அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அது மட்டுமல்ல, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வறட்சியான பகுதி, அந்த வறட்சியான பகுதிகளிலிருக்கின்ற ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுடைய கோரிக்கைகயை ஏற்று, வறண்ட ஏரிகளில் நீர் நிரப்புவதற்கு, மேட்டூர் உபரிநீர் வெளியேறுகின்றபோது, அந்த நீரை நீரேற்று முறை மூலமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் வறண்ட ஏரிகள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

அந்தத் திட்டத்திற்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டியது மட்டுமல்லாமல் தற்போது அந்தத் திட்டத்தையும் துவக்கி வைத்திருக்கின்றேன். 100 ஏரிகள் நிரம்புகின்றபோது, இந்த சட்டமன்றத் தொகுதியிலுள்ள விளை நிலங்கள், வேளாண் பெருமக்கள் பயனடைவார்கள். மேலும், பொதுமக்களுக்கு குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து