முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-19

சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  இந்த நிலையில்,  வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மணிமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது வாக்கை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார் . சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் சென்று வாக்கு செலுத்தினார்.

தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். நெல்லை பெரியநாயகிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  சபாநாயகர் அப்பாவு வாக்கு செலுத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார். தென்காசி கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிமுக முதன்மைச் செயலாளரும்,  திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளருமான துரை வைகோ வாக்கு செலுத்தினார். மதுரை ஹார்விபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வாக்களித்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஐஜேகே நிறுவனரும்,  பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான பாரிவேந்தர் வாக்களித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு செலுத்தினார்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் வாக்கு செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து