முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது. அவர்கள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்றே கூறி வருகின்றனர்.

ஆனால் தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. 

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று முன்தினம் 110 டிகிரி வெயில் கொளுத்தியது.  கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குளிருக்கேற்றாற்போல் உடையணிந்து செல்லும் நிலை அங்கு மாறி, வெயிலுக்கு குடைப்பிடித்தபடி மக்கள் செல்லும் காட்சியை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருக்க வெயில் காலங்களில், கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கும். 

ஆனால் இந்த ஆண்டு கோடை மழை என்பது அரிதான விஷயமாகவே இருக்கிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான கோடை மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது. 

இதே நிலை நீடித்தால், கத்தரி வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மேலும் அதிகரித்து காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக, கடந்த ஆண்டில் கத்தரி வெயில் காலத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியை தொட்டதுதான் அதிகபட்ச வெயிலாக பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்து விட்டது. அந்தவகையில் பார்க்கும் போது, இந்த ஆண்டு 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

கடந்த 2003-ம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானதுதான் இதுவரை பதிவான உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து